காணாமல் போன 11 மாணவ, மாணவிகள் மீட்பு
சேலம்:
சேலத்தில் காணாமல் போன 11 மாணவ, மாணவியரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 6 மாணவிகள், 5 மாணவர்கள் திங்கள்கிழமை மாலை டியூஷனுக்கு செல்வதாக கூறிவீட்டிலிருந்து சென்றனர். டியூஷன் முடிந்து, வழக்கமான நேரத்தைத் தாண்டியும் அவர்கள் வராததால், பயந்து போன பெற்றோர்டியூஷன் ஆசிரியை கீதாவின் வீட்டிற்குச் சென்று விசாரித்தனர்.ஆனால் 11 பேரும் டியூஷனுக்கே வரவில்லை என்று ஆசிரியை கீதா கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக அன்னதானப்பட்டி போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந் நிலையில் தமிழ்முரசு நாளிதழில் இந்த சிறுவர், சிறுமியர் குறித்த தகவல்களும், படங்களையும் பார்த்த காரிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்த சிறுமி ரேவதி இதுகுறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். இந்த 11 பேரும் இரண்டிரண்டு பேராக அருகில்உள்ள மலைக்குன்றுப் பகுதிக்கு சென்றதை தான் பார்த்ததாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரேவதியின் தந்தை அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார்காரிப்பட்டி அருகே உள்ள கருங்காலக்குன்று என்ற மலைப்பகுதிக்கு விரைந்தனர்.
அங்குள்ள மலைக் கோவிலில் 11 பேரும் குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்ததைப் பார்த்ததும்தான் போலீஸாருக்கு நிம்மதிவந்தது.
உடனடியாக அனைவரையும் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்து என்ன நடந்தது, ஏன் மலைக்குப் போனீர்கள் என்று கேட்டபோது, எங்களை பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும்திட்டுகிறார்கள். அடிக்கிறார்கள்.
தேர்வில் குறைவாக மதிப்பெண் வாங்கினால் ரொம்ப அடிக்கிறார்கள். இதற்குப் பயந்தே நாங்கள் வீட்டை விட்டுவெளியேறினோம் என்று அழுதபடி கூறினர்.
மீட்கப்பட்ட அருண்குமார், குமரேசன், செண்பகப்பாண்டியன், மோகன்ராஜ், மனோஜ் பிரபாகரன், நவீனா, ப்ரீத்தி, சீதா, பிருந்தா,சாந்தி பிரியா, சத்தியப் பிரியா ஆகிய 11 பேர் குறித்து, பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டு அனைவரும் காவல் நிலையத்திற்குவிரைந்தனர்.
பிள்ளைகளைப் பார்த்ததும் கதறி அழுத அவர்கள் பிள்ளைகளை கட்டித் தழுவிக் கொண்டனர்.
11 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.