டாஸ்மாக்கில் கள்ளச் சாராயம்?: ஒருவர் பலி
திருச்சி:
திருச்சி அருகே தமிழக அரசின் மதுபானக் கடையான டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் குடித்தவர் சுருண்டு விழுந்துஇறந்தார். இதனால் டாஸ்மாக் கடையிலேயே கள்ளச் சாராயம் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சியை அடுத்துள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் (வயது45), இவரது நண்பர் அழகுமலை. இந்தஇருவரும் நேற்றிரவு டாஸ்மாக் கடைக்குச் சென்று மதுபானம் வாங்கிக் குடித்தனர்.குடித்த சிறிது நேரத்திலேயே இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் கணேசன் வயிறு எரிகிறதே என்று கதறினார். இதையடுத்துஇருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார்.
அவரது நண்பர் அழகுமலையின் நிலைமை மோசமாக உள்ளது. டாஸ்மாக் கடையில் இருந்த சரக்கே ஒருவரின் உயிரைப்பறிந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மதுபானக் கடையிலேயே கள்ளச் சாராயம் விற்கப்பட்டதோ என்ற சந்தேகம் அப் பகுதியில் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் அசோக்குமார் தாஸ் கூறுகையில்,
கணேசன் அருந்திய மது சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கள்ளச் சாராய விற்பனையே இல்லை.
அவர் அருந்தியது கள்ளச் சாராயமாக இருக்க முடியாது. அவர் அருந்திய மதுவில் யாரோ எதையோ கலந்திருக்க வேண்டும் என்றுநினைக்கிறோம். இதில் ஏதோ சதி இருக்கிறது. அது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.