ஆடிட்டருக்கு அடி: ஜெயேந்திரர் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 10 பேர் இன்று சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் ஆஜராயினர்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு கடந்த மாதம் 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஜெயேந்திரர் நேரில் ஆஜராகவில்லை.அவர் ஆஜராகாததற்கு வழக்கறிஞர் தினகரன் கூறிய விளக்கத்தை நீதிபதி செல்வக்குமார் ஏற்கவில்லை.மேலும், ஜெயேந்திரர் நேரில் ஆஜராகாமல் நொண்டிச் சாக்கு சொல்லி வந்ததற்கு கடும் கண்டனத்தையும் நீதிபதி தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரர் நேரில் ஆஜரானார். மேலும், சுந்தரேசஅய்யர், ரகு உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் நேரில் ஆஜராகியிருந்தனர்.
அப்போது ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தினகரன், இந்த வழக்கை புதுவைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுசெய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான தீர்ப்பு வருகிற 27ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. எனவே விசாரணையை ஒத்திவைக்கவேண்டும் என்று கோரினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி செல்வக்குமார் பிப்ரவரி 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.