வருமுன் காப்போம்: சங்கர மட ஆக்கிரமிப்பை இடித்த ஊழியர்கள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் முன் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்கஅரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி கிளம்பியதைத் தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை சங்கர மட ஊழியர்களே இடித்துத் தள்ளிவருகின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் இரு சங்கராச்சாரியார்களும் சிக்கியது முதலே காஞ்சி சங்கர மடமும் அடிக்கடி ஏதாவது ஒருவிஷயத்துக்கா செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.இந் நிலையில், சங்கர மடத்தின் முன் பகுதியில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதை இடிக்க அதிகாரிகள் வரப்போவதாக நேற்று மாலை திடீரென செய்தி பரவியது. அதை உறுதிப்படுத்துவது போல சில போலீஸாரும் அந்தப் பகுதிக்குவந்தனர்.
இதைத் தொடர்ந்து, அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நுழைவாயில் மேல் கூரை உள்ளிட்ட சிலவற்றை இடித்துத்தள்ள சங்கர மட ஊழியர்களுக்கு ஜெயேந்திரர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அந்த ஊழியர்களே சில கூலித் தொழிலாளர்களை பிடித்து வந்து கடப்பாரைகளுடன் களமிறங்கினர்.
அவர்களே அந்த ஆக்கிரமிப்புக்களை இடித்து அப்புறப்படுத்தினர். இருப்பினும், அதிகாரிகள் எந்த நேரமும் வரலாம் என்றபீதியும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications