13ல் கூடுகிறது சட்டசபை: ஏப்ரலில் தேர்தல்?
சென்னை:
இந்த சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் வருகிற 13ம் தேதி ஆளுனர் உரையுடன் தொடங்குகிறது.
நடப்பு தமிழக சட்டசபை தனது இறுதி நாட்களை நெருங்கி விட்டது. இன்னும் 5 மாதத்தில் சட்டசபையின் ஆயுள் முடிகிறது.இந் நிலையில் சட்டசபையின் இறுதிக் கூட்டத் தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை ஆளுனர்பர்னாலா வெளியிட்டுள்ளார். 13ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு ஆளுனர் உரை நிகழ்த்துகிறார். அவரது உறைக்குப் பின்னர்சட்டசபை ஒத்திவைக்கப்படும்.
அதன் பின்னர் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் 16ம் தேதி சட்டசபை கூடுகிறது. ஆளுனர் உரை மீதான விவாதம்அன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதில் தேர்தலை மனதில்வைத்து நிறைய வரிச் சலுகைகள் அள்ளி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
கூட்டத் தொடர் 10 நாட்களுக்கே நடைபெறும் எனத் தெரிகிறது.
கடைசிக் கூட்டத் தொடர் என்பதாலும், சென்னையில் வெள்ள நிவாரண நெரிசலில் சிக்கி 48 பேர் இறந்த விவகாரம் உள்ளிட்ட பலவிவகாரங்களை எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் கூட்டத் தொடர் பெரும் சூட்டைக் கிளப்பும் எனத்தெரிகிறது.
ஏப்ரலில் தேர்தல்:
இதற்கிடையே தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.
அடுத்த மாதத் தொடக்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர்பி.பி.தாண்டன், திங்கள்கிழமை சென்னை வருகிறார். தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா உள்ளிட்டோருடன் முக்கியஆலோசனையில் அவர் ஈடுபடுகிறார்.
இதையடுத்து கோவை செல்லும் தாண்டன் அங்கு மேற்கு மண்டல தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கவுள்ளார். பின்னர்மதுரை செல்லும் தாண்டன், தெற்கு மற்றும் கிழக்கு, மத்திய மண்டல தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போதைய நிலவரப்படிஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஒரே நாளில் 234 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவைநடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.