பாலாறு அணை: ஆந்திராவுக்கு எதிராக வேலூரில் குவியும் விவசாயிகள்
சென்னை:
பாலாற்றின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள ஆந்திர அரசின் முயற்சிகளை முறியடிப்பது தொடர்பாக விவாதிக்க பல்வேறுவிவசாய அமைப்புகளின் சார்பில் வேலூரில் வருகிற 10ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆந்திர மாநிலம் குப்பம் அருகே (வாணியம்பாடிக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது) பாலாற்றின் குறுக்கேஅணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது.வட மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன நீராதாரமாக விளங்குவது பாலாறு. இந்த நிலையில் ஆந்திர அரசின் முடிவு வடதமிழகத்தை பாலைவனமாக்கி விடும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து ஆந்திர முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர்கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் ஆந்திர அரசின் முடிவை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் வட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் தற்போது ஒன்று திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபடமுடிவு செய்துள்ளன. தங்களது போராட்டம் குறித்து முடிவு செய்ய வரும் 10ம் தேதி வேலூரில் கூடுகின்றன.
பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு திமுகவிவசாய அணி ஏற்பாடு செய்துள்ளது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம்தெரிவித்துள்ளார்.