தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு கருணாநிதி
சென்னை:
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டும்என்று கட்சித் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்களுடன் கருணாநிதி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது.கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின், தலைமைக் கழக தன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனைத்து மாவட்ட திமுக செயலாளர்களும் இதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், திருச்சியில் நடைபெறவுள்ள மாநில மாநாடு,ஜெயலலிதா அரசைக் கண்டித்து மேற்கொள்ளப்படவுள்ள மாநிலம் தழுவிய பிரசார இயக்கம், தேர்தல் பணிகள் ஆகியவை குறித்துஇதில் விவாதிக்கப்பட்டது.
எந்தெந்தத் தொகுதிகளில் திமுக போட்டியிடுவது, எதை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுத் தருவது, தேர்தல் வியூகம், தேர்தல்செலவுகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இக் கூட்டத்தில் திமுகவினருக்கு பல உத்தரவுகளை கருணாநிதி பிறப்பித்தார். பொங்கல் முடிந்தவுடனே தேர்தல் பணிகளில்தீவிரமாக ஈடுபட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியை அகற்றக் கோரி ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் 18ம் தேதி முதல்மேற்கொள்ளப்படவுள்ள பிரசார இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
அமராவதி ஆற்றுப் பாலம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் மீது ஜெயலலிதாஅரசு பொய்யான வழக்கை போட்டுள்ளதைக் கண்டித்து இக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.