செய்திகளை திரிப்பதில் கருணாநிதி கெட்டிக்காரர்: அமைச்சர் பாராட்டு
சென்னை:
திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இதை மறைத்துபிரச்சினையை திசை திருப்பப் பார்க்கிறார் கருணாநிதி என தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமராவதி பாலத்தை பி.ஓ.டி. முறையில் கட்ட கடந்த 1996ம்ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ள பலதகவல்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன.செய்திகளை திரித்துக் கூறுவதில் கருணாநிதி கெட்டிக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுமக்களை திசை திருப்பவேஇவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.
உண்மையில், திமுக ஆட்சிக் காலத்தில்தான் இந்தப் பாலம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான அரசாணை4.4.1997ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது 18.10.1995ல் உயர்மட்டக் குழு கூட்டப்பட்டு பி.ஓ.டி.முறையில் இந்தப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டதாக மற்றொரு பொய்யையும் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனால் அந்த உயர்மட்டக் குழு கூட்டம், பாலம் தொடர்பான இறுதி முடிவை அரசிடம் விட்டு விட்டது. அதன் பின்பு சாதக,பாதகங்களை ஆராய்ந்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற கரூர் நகராட்சியிடம் போதிய பணம் இல்லாததால், ஹட்கோ கடன்மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியைப் பெற்று பாலம் கட்ட 30.1.1996ல் முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலானஅரசு ஆணை வெளியிட்டது.
அந்த அரசு உத்தரவில், அமராவதி பாலத்தை பி.ஓ.டி. முறையில் கட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இந்த உத்தரவுக்கு மாறாக, அமராவதி பாலத்தை பி.ஓ.டி. முறையில் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளி கோரவேண்டும் என்று திமுக ஆட்சிக் காலத்தில்தான், அதாவது, 4.4.1997ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் மூலம் திமுக ஆட்சியில்தான் பி.ஓ.டி. முறையில் அமராவதி பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது தெளிவாகிறது என்றுகூறியுள்ளார் அன்பழகன்.