ஜெவிடம் ஏமாந்து விடாதீர்கள்!: கருணாநிதி
சென்னை:
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் முதல்வர் ஜெயலலிதா தினசரி அறிவித்து வரும் அறிவிப்புகளை கண்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சமூக நலத் திட்டங்களை எல்லாம் ரத்துசெய்து விட்டு, இப்போதுதிடீர் ஞானோதயம் வந்தது போல, தினசரி ஒரு அறிவிப்பாக வெளியிட்டு வருகிறார் ஜெயலலிதா. இதன்மூலம் மக்களை அவர் ஏமாற்றி, வஞ்சித்து வருகிறார்.சுனாமி நிதி முறைகேடு, வெள்ள நிவாரண நிதி பெற காத்திருந்து நெருக்கடியில் சிக்கி 53 பேர் சென்னையில் உயிரிழந்தது, ராணிமேரிக் கல்லூரி விவகாரம், என் மீதும், கூட்டணிக் கட்சியினர் மீதும் தொடரப்பட்ட பொய் வழக்குகள் என இந்த ஆட்சியின்அவலங்களை, அலங்கோலங்களை பெரிய பட்டியலே இடலாம்.
இந்த ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் சமூகத்தின் எந்தத் தரப்பினரையாவது கொடுமைப்படுத்தாமல் ஜெயலலிதா விட்டுவைத்துள்ளாரா?.
ஆடையில் ஒரு கிழிசல் இருந்தால் அதைத் தைத்து விடலாம். ஆனால் ஆயிரக்கணக்கான கிழிசல் இருந்தால் அதை என்னசெய்வது, குப்பை கூடைக்குத்தானே கொண்டு போக வேண்டும்?
தேர்தல் நெருங்கி வருவதால் தினசரி ஒரு அறிவிப்பாக வெளியிட்டு வரும் ஜெயலலிதாவின் அறிவிப்புகளால் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.