தமிழர்கள் வீடுகள் மீது இலங்கை ராணுவம் குண்டுவீச்சு: அகதிகள் வருகை ஆரம்பம்
ராமேஸ்வரம்:
இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரஆரம்பித்துள்ளனர்.
புலிகள்-ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வட-கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதிபரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.24 தமிழர்கள் ஒரு படகில் தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர்.
அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்திரம் வந்தடைந்தனர். அவர்களைசோதனைச் சாவடி போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்தனர்.
அப்போது இலங்கை ராணுவம் தங்களது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்து வருவதாகவும். பெண்களைகற்பழித்து வருவதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
மல்லிகா, ரெஜினா ஆகிய பெண்கள் நிருபர்களிடம் பேசுகையில், எங்களது வீடுகளின் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசித்தாக்கி வருகிறது. இதனன் அங்கிருந்து தப்பி வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நேற்று நடந்த குண்டு வீச்சுத்தாக்குதலில் எங்களது உறவினர்கள் 5 பேர் படுகாயமடைந்துவிட்டனர்.
இதனால் வீடுகளை விட்டு ஓடிய நாங்கள் காட்டுப் பகுதியில் சென்று நீண்ட நேரம் பதுங்கினோம். பின்னர் தலைக்கு ரூ. 5,000கொடுத்து படகுகள் மூலம் ராமேஸ்வரத்துக்குத் தப்பி வந்துள்ளோம்.
வீடுகளுக்குள் நுழைந்து ஆண், பெண் என்று பாராமல் கண்மூடித்தனமாக நடக்கும் இலங்கை ராணுவத்தினர், தனதுகட்டுப்பாட்டில் அழைத்துச் செல்பவர்களை சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைக்கு உள்ளாக்கி வருகின்றனர் என்றனர்கண்களில் மிரட்சியும் கண்ணீருமாய்.
இலங்கையில் போர் அபாயம் சூழ்ந்த பின் முதல் முதலாக இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகள் இவர்கள். இவர்களைத் தொடர்ந்துமேலும் பலரும் ராமேஸ்வரம் வந்திறங்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்த 24 பேரையும் மண்டபம் முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ராஜேந்திரன் தெரிவித்தார்.