நெல்லை, குமரியில் மழை: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு
திருநெல்வேலி:
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில்நல்ல மழை பெய்துள்ளது. குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது மழைக்காலம் முடிந்து குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால், தென் கோடி மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நேற்றுமுதல் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. நெல்லையிலும் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.குற்றாலம், தென்காசி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. அபாய வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நேற்று சுமார் ஐந்து மணி நேரத்திற்கு பெய்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கிக்காணப்பட்டது.
இன்றும் தென் மாவட்டங்கள் பலவற்றில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.