சட்டசபையில் பாமக வெளிநடப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சைக் கண்டித்தும், சபாநாயகர் காளிமுத்து பேசுவதற்கு அனுமதி அளிக்க மறுத்ததைக்கண்டித்தும் பாமக உறுப்பினர்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், இந்த அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் ஆடு கோழி பலித் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து கிராம மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியது.அதேபோல விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தையும் இந்த அரசு நிறுத்தி விட்டது. இதனால் விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, கோவில்களில் ஆடு கோழி பலித் தடைச் சட்டத்தை இந்த அரசு கொண்டுவரவில்லை. ஏற்கனவே இருந்த சட்டத்தைத் தான் நாங்கள் அமல்படுத்தினோம். பின்னர் அந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டதை உறுப்பினர் மறந்து விட்டார், கூறாமல் மறைத்து விட்டார்.
அதேபோல விவசாயிகளுக்கு இந்த அரசு தொடர்ந்து இலவச மின்சாரத்தை விநியோகித்து வருகிறது. உறுப்பினர் மணி தொடர்ந்துதவறான தகவல்களையே தருவது வழக்கமாக கொண்டுள்ளார்.
உறுப்பினர் மணியை நான் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கவனித்துத் தான் வருகிறேன். அவருக்கு வேறு பல பணிகள் உள்ளன.இதனால் முதல் நாள் தயாரிக்கப்பட்ட உரையை மறுநாள் சபையில் வந்து வாசிக்கிறார் என்றார்.
முதல்வரின் பேச்சுக்கு பாமக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். முதல்வரின் புகாரை மறுத்து ஜி.கே.மணி பேசமுற்பட்ட போது அதற்கு சபாநாயகர் காளிமுத்து அனுமதி அளிக்கவில்லை. இதைக் கண்டித்து பாமக உறுப்பினர்கள்வெளிநடப்புச் செய்தனர்.