45 நாள் தலைமறைவுக்குப் பின் தலைகாட்டினார் கிருஷ்ணசாமி
சென்னை:
கொலை வழக்கில் சிக்கி கடந்த ஒன்றரை மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி இன்று திடீரென சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சென்னை திரிசூலம் பகுதியில் கல் குவாரி தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பெரும் மோதலில் மாடசாமி என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இவரைக் கொலை செய்ய உத்தரவிட்டது டாக்டர் கிருஷ்ணசாமி தான் என்று மாடசாமியின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.இதைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மீது பல்லாவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்துடாக்டர் கிருஷ்ணசாமி டிசம்பர் 5ம் தேதி முதல் தலைமறைவாகி விட்டார்.
முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு செய்திருந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகிய கிருஷ்ணசாமி, கடந்த வாரம் முன் ஜாமீன் பெற்றார்.
இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 45 நாள் தலைமறைவுக்குப் பின்னர் இன்று திடீரென செய்தியாளர்கள் முன் தோன்றினார்கிருஷ்ணசாமி. ஏன் இத்தனை நாட்கள் தலைமறைவாக இருந்தீர்கள் என்று கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். பின்னர்பொதுவான கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார்.