மாணவர்களுக்கு டிக்ஷனரி, அட்லஸ்: ஜெ.
சென்னை:
6வது வகுப்பு முதல் 12வது வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக டிக்ஷனரி மற்றும் அட்லஸ் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இலவச பாடப் புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், விடுதிக் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என இந்த நடவடிக்கைகள் மிக நீண்டவை. நடப்பாண்டில், மாணவ, மாணவியருக்கான விடுதிகளில் 3275 கூடுதல் இடங்களை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, ரூ. 4.76 கோடி மதிப்பில், தமிழகத்தில் கூடுதலாக 216 விடுதிகள் திறக்கப்படும். இதில், பழங்குடியின, ஆதிதிராவிட மாணவர்களுக்கு 108 விடுதிகளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 108 விடுதிகளும் அமைக்கப்படும்.
இந்த 108 விடுதிகளில் 20 கல்லூரி விடுதிகளும், 88 பள்ளி விடுதிகளும் அடங்கும். இந்த விடுதிகள் வாடகைக் கட்டடங்களில் உடனடியாக தொடங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
இதுதவிர ஆதிதிராவிட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபுப் பிரிவைச் சேர்ந்த, 6ம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதியும் (டிக்ஷனரி), பூகோள அறிவை மேம்படுத்திக் கொள்ள உலக வரைபடம் (அட்லஸ்) இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதற்காக ரூ. 2.17 கோடி செலவிடப்படும். இதன் மூலம் 1.24 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications