வாக்காளர் விண்ணப்பம்: கலெக்டர்களுக்கு தேர்தல் அதிகாரி கடும் உத்தரவு
சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி தரப்படும் விண்ணப்பங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. முதல் கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் குறைபாடுகள் இருந்தால்விண்ணப்பித்து சரி செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சில முக்கிய உத்தரவுகளை நரேஷ் குப்தா பிறப்பித்துள்ளார். வாக்காளர்பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர்களைச் சேர்ப்பதற்கு கத்தை, கத்தையாக விண்ணப்பங்களைக் கொடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தனித் தனியாக வந்த விண்ணப்பங்கள் என்று கூறி சிலர் மொத்தமாக விண்ணப்பங்களைக் கொடுக்கமுயற்சிக்கிறார்கள் எனத் தகவல் வந்துள்ளது. எனவே தங்களிடம் கொடுக்கப்படும் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவையும் தேர்தல் பதிவு அதிகாரிகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
18 முதல் 20 வயதுக்குள் உள்ளவர்களாக இருந்தால் கண்டிப்பாக வயதுச் சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்காளர்விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர் அல்லது அவரது பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் மட்டுமே அளிக்க வேண்டும்.வேறு யார் கொடுத்தாலும் அதை தேர்தல் பதிவு அதிகாரிகள் பெறக் கூடாது.
விண்ணப்பத்தின் வலது மேல்புறத்தில், விண்ணப்பதாரரின் கையெழுத்துப் பெறப்பட வேண்டும். யார் விண்ணப்பத்தைப்பெறுகிறார்களோ அந்த அதிகாரயின் கையெழுத்து, துறை, பதவி ஆகியவை இடது மேல் புறத்தில் இடம் பெற வேண்டும்.
தினசரி எத்தனை விண்ணப்பங்கள் வருகின்றன் என்பது குறித்து எனது அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள்அறிக்கை அனுப்ப வேண்டும். அடுத்த நாள் பகல் 12 மணிக்குள் இ-மெயில் மூலம் இந்த அறிக்கை வந்து சேர வேண்டும் என்றுகூறியுள்ளார் நரேஷ் குப்தா.