தொகுதி பங்கீடு:கருணாநிதி-ராமதாஸ் ஆலோசனை
சென்னை:
சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநதியை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார்.
திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சில உதிரிக் கட்சிகள் இணைந்துள்ள திமுக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பெரும் சிக்கல் நிலவி வருகிறது.முக்கியக் கூட்டணிக் கட்சிகளான பாமக, காங்கிரஸ், மதிமுக ஆகியவை கூடுதல் இடங்களை எதிர்பார்ப்பதால் தொகுதிகளைப் பிரிப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருடன் ஏற்கனவே ஒரு ரவுண்டு பேச்சுவார்த்தையை அவர் முடித்து விட்டார்.
இந் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வைகோ மீண்டும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் இருவரும் பேசினர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸும் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். ராமதாஸுடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, எம்.பி. ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சென்றிருந்தனர்.
இச் சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்து இரு தலைவர்களும் விவாதித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பிற கட்சிகளின் தலைவர்களும் கருணாநிதியை சந்தித்து பேசக் கூடும் எனத் தெரிகிறது.
காங்கிரஸை பொறுத்தவரை தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச வாசனை அக் கட்சித் தலைமை அனுமதிக்காது என்று தெரிகிறது. வாசன் போய் பேசினால் பிற கோஷ்டிகள், குறிப்பாக திண்டிவனம், இளங்கோவன் கோஷ்டி முஷ்டியைத் தூக்கும் என்பதால், கோஷ்டி கடந்த ஒரு முக்கிய தலைவர் டெல்லியில் இருந்து கருணாநிதியுடன பேசுவார் என்று தெரிகிறது.