தூத்துக்குடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பலி: தற்கொலை?
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி பலியானார்கள்.
தூத்துக்குடி, மேலத்தட்டப்பாறை என்ற இடத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் ரியாத்தில் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி அமுதா (வயது 30). இவர் தனது இரட்டை குழந்தைகளான ராம் பிரகாஷ் (வயது 4), லட்சுமி பிரியா(வயது 4) ஆகியோருடன் மேலத் தட்டப்பாறையில் உள்ள தனது தாயார் சீதாலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தார்.இன்று அதிகாலை 5.30 மணியளவில் வேலுச்சாமியின் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசித்துவருவோர் பதட்டமடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது வேலுச்சாமியின் மனைவி அமுதா, அவரது இரு குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். அமுதாவின் தாயார் சீதாலட்சுமி தீயில் கருகி உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கருகிக் கிடந்த அமுதா மற்றும் அவரது 2 குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர்.
மின் கசிவு அல்லது மண்ணெண்ணெய் விளக்கு விழுந்து இவர்கள் பலியானார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களாஎன போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக சீதாலட்சுமியும் அமுதாவும் குழந்தைகளையும் எரித்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று அப்பகுதியில் பேசப்படுகிறது.