காங். கூட்டணியில் தொடரும் வாய்ப்பில்லை: புதுவை இ.கம்யூ.
பாண்டிச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும் வாய்ப்பு குறைந்து வருவதாக அம்மாநிலசெயலாளர் கலைநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுவையில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் அரசு மக்கள்விரோத, ஊழல் வாத ஆட்சி. இந்த ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டதைத் தவிர வேறு ஒரு பலனையும் அடையவில்லை.இத்தகைய ஊழல் நிறைந்த, மக்கள் விரோத, ஜனநாயக விரோத கட்சியுடன் வருகிற சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைப்பதுசாத்தியமல்ல. அதற்கான வாய்ப்புகளும் குறைவு.
சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கட்சியின் செயற்குழு கூடி முடிவுசெய்யும்.
புதுவை துணை நிலை ஆளுநர் லகேரா பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறார். இதே நிலை தொடர்ந்தால், அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆளுநரை மாற்ற இயக்கம் நடத்த வேண்டி வரும் என்றார் கலைநாதன்.
புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏவாக உள்ள கலைநாதன் சமீபத்தில் புதுவை சட்டமன்றம் முன்பு திடீரெனஉண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.