குண்டர் சட்டம்: நீதிமன்றத்தை நாடும் தனசேகரன்
சென்னை:
குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க கோரி திமுக கவுன்சிலர் தனசேகரன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்படவுள்ளது.
எம்ஜிஆர் நகர் வெள்ள நிவாரண நெரிசலில் 42 பேர் பலியான சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு திமுக கவுன்சிலர் தனசேகரனைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கியது.இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடிசெய்யப்பட்டது. வெள்ள நிவாரண நெரிசல் சாவுக்கு தமிழக அரசே முழுப் பொறுப்பு என நீதிபதிகள் கடும் கண்டனம்தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் வழங்கினாலும் தனசேகரனை தமிழக அரசு குண்டர் சட்டத்தில்உள்ளே போட்டுவிட்டதால் அவரால் விடுதலை ஆக முடியாத சூழல் நிலவுகிறது.
இந் நிலையில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனசேகரன் விண்ணப்பித்திருந்தார். குண்டர் சட்டத்தில்அடைக்கப்பட்டவர்கள் இது போல் மனு தாக்கல் செய்வது வழக்கம். இதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழுவிசாரித்து தீப்பளிக்கும்.
இந்த நிலையில் தனசேகரனின் மனுவை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தங்கராஜ், மலை சுப்பிரமணியம்,எஸ்.எஸ்.சுப்பிரமணியம் அடங்கிய குழு விசாரித்தது. இந்த குழு முன் தனசேகரன் நேரில் ஆஜராகி வாதாடினார்.
அப்போது எம்ஜிஆர் நகர் வெள்ள நிவாரண கூட்ட நெரிசல் சம்பவத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும் குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இருப்பினும் தனசேகரனை குண்டர் சட்டத்தில் இருந்துவிடுவிக்க நீதிபதிகள் குழு மறுத்துவிட்டது.
இது குறித்து தனசேகரனின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவன் கூறுகையில், உச்சநீதிமன்ற கண்டனத்துக்கு பிறகும்தனசேகரனை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்வோம் என்று கூறினார்.