திருச்செந்தூர் முருகன் கோவிலில் 60 அடி உயர தொட்டியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியிலிருந்து குதித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் சமீபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் 70 அடி உயர செல்போன் கோபுரத்தின் மீது ஏறிக் கொண்டு கீழே குதிக்கப் போவதாக மிரட்டினார். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அவரை சமயோஜிதமாக பேசி கீழே கொண்டு வந்தனர்.இந் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஒரு வாலிபர் ஞாயிற்றுக்கிழமை ஏறினார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர். தொட்டியின் மீது ஏறி அபாயகரமாக நின்று கொண்டிருந்த அந்த நபரை கீழே இறங்கி வருமாறு போலீஸ்காரர் ஒருவர் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நபர் அதை சட்டை செய்யவே இல்லை.
தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் அவர் தீவிரமாக இருந்தது தெரியவந்தது.
போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் இறங்கி வா, இறங்கி வா என்று கூறிக் கொண்டிருந்தனர்.
இந் நிலையில் பொதுமக்கள், போலீஸார், தீயணைப்புப் படையினர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, மேலேயிலிருந்து அந்த வாலிபர் தலைகீழாக கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு அங்கேயே இறந்து போனார்.