சென்னை வந்த வாசனுக்கு பிரமாண்ட வரவேற்பு
சென்னை:
மத்திய அமைச்சரான பின் முதல் முறையாக சென்னை வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் மிகப் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து கலக்கியெடுத்துவிட்டனர்.
மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) ஜி.கே.வாசன் நேற்று பதவியேற்றார். பின்னர் தனது மனைவி சுனிதா சகிதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார் வாசன்.மத்திய அமைச்சரான பின் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், மிகவும் சிறியவனான எனக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் ஏற்கனவே 12 மத்திய அமைச்சர்கள் சிறப்பான சேவை புரிந்து வருகிறார்கள். நானும் எனது துறையின் மூலமாக தமிழகத்திற்கும், தமிழக மக்களின் நலனுக்கும் பாடுபடுவேன். வரும் 2ம் தேதி அமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளேன் என்றார் வாசன்.
அமைச்சரான பின்னர் முதல் முறையாக இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தார் வாசன். வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளாக விமான நிலையத்தில் கூடியிருந்தனர். பேண்டு வாத்தியம் முழங்க, வான வேடிக்கைகளுடன் வாசனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வேன்களில் வந்த தொண்டர்களால் விமான நிலையமே குலுங்கி விட்டது.
விமான நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்ற வாசன், கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்தார்.சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கும் மாலை அணிவித்தார். பின்னர் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள தனது தந்தை மூப்பனார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி பின்னர் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் சத்தியமூர்த்தி பவன் சென்ற வாசனுக்கு கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். வாசனை வரவேற்க சத்தியமூர்த்தி பவனிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications