மண்டபத்தை காக்கவே விஜய்காந்த் கட்சி!
சென்னை:தனது கல்யாண மண்டம் இடிபட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் நடிகர் விஜயகாந்த் கட்சியைத் தொடங்கினார் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் அமைப்பதற்காக தனது கல்யாண மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று கோரி விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்குப் பதில் அளிக்குமாறு கூறி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து டி.ஆர்.பாலு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் சின்னி ரெட்டி ஆகியோரது சார்பில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனலர் வில்சன் தனித் தனியாக 2 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
டி.ஆர்.பாலு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் போலியானவை, ஆதாரமற்றவை, பொய்யானவை. வேண்டும் என்றே என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே என்னை இவ்வழக்கில் சேர்த்தது தவறு. அரசியல் உள்நோக்கத்துடன் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சின்னி ரெட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதமே பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு விட்டது. 2006 பிப்ரவரி 1ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. நில ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் 21 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டோம்.
162 பேர் கருத்து தெ>வித்தனர். விஜயகாந்த், பிரமேலதா மட்டும் கருத்து தெரிவிக்கவில்லை. இதுதவிர, யாருக்கும் பாதிக்காத வகையில் மாற்றுத் திட்டத்தைத் தரலாம் எனவும் மனுதாரருக்குத் தெரியப்படுத்தினோம்.
ஆனால் விஜய்காந்த்தும் அவரது மனைவியும் தங்களது நிலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மற்றவர்களின் நிலங்களைப் பாதிக்கும் வகையில் மாற்றுத் திட்டத்தைக் கொடுத்தனர்.
ஆனால் அரசு அதை ஏற்க மறுத்து விட்டது. இதிலிருந்தே தங்களது திருமண மண்டபத்தைக் காப்பாற்றத்தான் வழக்கே தொடர்ந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
அந்த சாலையில், 2.50 லட்சம் வாகனங்கள் ஒரு நாளைக்கு செல்கின்றன. போக்குவரத்து நெரிசலால் மக்கள் படும் அவதியைக் கருத்தில் கொண்டே, அங்கு மேம்பாலத் திட்டம் 2004க்கு முன்பே போடப்பட்டது.
ஆனால் விஜயகாந்த்த தனது கட்சியை 2005 செப்டம்பர் 14ம் தேதிதான் தொடங்கினார்.
மண்டபத்தைக் காக்கும் முகமாகவே அவர் கட்சி தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது நிலத்திற்கும், மண்டபத்திற்கும் சேர்த்து மொத்தம் ரூ. 8.55 கோடி நஷ்ட ஈடு நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்டிருந்தது.
பிப்ரவரி 3ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications