ராசியில்லாத 13: பீதியில் ஜ.மு.கூ. தொண்டர்கள்
சென்னை:
மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் அமைச்சர்களாகியுள்ளனர் என்ற சாதனை ஒரு பக்கம் மகிழ்ச்சியைத்தந்தாலும், 13 என்ற எண் ராசியில்லாத நம்பராச்சே, இதனால் ஏடா கூடமாக ஏதேனும் நடக்குமோ என்ற பீதியில் திமுக கூட்டணிக்கட்சித் தொண்டர்கள் உள்ளனர்.
முன்பெல்லாம் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரோ அல்லது இருவரோ தான் அமைச்சர்களாக இடம்பெறுவர். அவர்களும் கூட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகத் தான் பெரும்பாலும் இருப்பார்கள். வி.பி.சிங் தலைமையில்என்றைக்கு மத்தியில் கூட்டணி ஆட்சி நடைமுறைக்கு வந்ததோ அன்று முதல் தமிழகத்தைச் சேர்ந்த நிறையப் பேர் மத்தியஅமைச்சர்களாகி சாதனை படைத்து வருகிறார்கள்.இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவிலான தமிழக எம்.பிக்கள் தற்போது மத்திய அமைச்சர்களாகி சாதனைபடைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இது வரை இல்லாத அளவுக்கு 13 தமிழகஎம்.பிக்கள் மத்திய அமைச்சர்களாகி வரலாறு படைத்துள்ளனர்.
இத்தனை அமைச்சர்களை தமிழகத்துக்குக் கொடுத்துள்ளோமே என்று ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர்பெருமிதம் படும் அதே வேளையில், 13 என்ற எண் ராசியானதில்லையே, இதனால் சட்டசபைத் தேர்தலில் விரும்பத்தகாதமுடிவுகள் அமையுமோ என்ற ராசி பயம் அவர்களை ஆட்டுவிக்கத் தொடங்கியுள்ளது.
13 என்ற எண் உலகமெங்கும் ராசியில்லாத எண்ணாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச்சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 13 என்று உயர்ந்திருப்பதன் மூலம், அந்த எண் ராசி கூட்டணிக்கு ஏதாவது ஆபத்தைஏற்படுத்துமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே அமைச்சர்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்த காங்கிரஸ் கட்சிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ராசி பயம் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்திற்கு அதிக அளவு அமைச்சர்கள் கிடைத்திருப்பதை எண்ணி மகிழாமல் இருக்கமுடியாது. இதற்கு முன்பு அதிகபட்சமாக குஜ்ரால் மற்றும் தேவேகெளடா பிரதமராக இருந்த போது தமிழகத்தைச் சேர்ந்த 9பேர் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். அவர்களில் 4 பேர் கேபினட் அமைச்சர்களாக இருந்தனர்.
ப.சிதம்பரம், அருணாச்சலம், முரசொலி மாறன், டி.ஜி.வெங்கட்ராமன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன்,தனுஷ்கோடி ஆதித்தன், டி.ஆர்.பாலு, என்.வி.என். சோமு ஆகியோரே அந்த அமைச்சர்கள். இவர்களில் முரசொலி மாறன்,டி.ஆர்.பாலு, சோமு ஆகியோர் மட்டுமே திமுகவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவர்கள்.
ஆனால் இன்று நிலை தலைகீழாக மாறியுள்ளது. மொத்தம் உள்ள 13 அமைச்சர்களில் 7 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். இவர்களில்டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்கள். திமுகவுக்கு தமிழகத்தில் மொத்தம் 17 எம்.பிக்கள்உள்ளனர். இவர்களில் 15 பேர் லோக்சபா உறுப்பினர்கள், 2 பேர் ராஜ்யசபா உறுப்பினர்கள்.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள்: டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா, பழனிமாணிக்கம், வெங்கடபதி, ரகுபதி, சுப்புலட்சுமிஜெகதீசன்.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில், லோக்சபாவிலிருந்து 10 பேரும், ராஜ்யசபாவிலிருந்து 3 பேரும் என மொத்தம் 13 பேர்உள்ளனர். இவர்களில் நான்கு பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் ப.சிதம்பரம், மணிசங்கர அய்யர் ஆகியோர்கேபினட் அமைச்சர்கள். ஜி.கே.வாசன் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் உள்ளனர்.
பாமகவைப் பொருத்தவரை அவர்களுக்கு லோக்சபாவில் 5 எம்.பிக்களும், ராஜ்யசபாவில் ஒரு எம்.பியும் உள்ளனர். இவர்களில்ராமதாஸின் மகன் அன்புமணி கேபினட் அமைச்சராகவும், ஆர்.வேலு இணை அமைச்சராகவும் உள்ளனர்.
மதிமுகவுக்கு நான்கு எம்.பிக்கள் உள்ளனர். இருப்பினும் அவர்கள் யாரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
தமிழகத்தில் உள்ள 39 எம்.பிக்களும் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களில் 4 பேர் பெண்கள். திமுககூட்டணியைச் சேர்ந்த யாரும் ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இல்லை. 4 பெண் எம்.பிக்களில் திமுகவைச் சேர்ந்த சுப்புலட்சுமிஜெகதீசன் மட்டுமே அமைச்சராக உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி வரும் காங்கிரஸ், திமுக, அமைச்சர்கள்நியமனத்தில் அதைக் கடைப்பிடிக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களாலும் தமிழகத்திற்கு ஒரு பலனும் இல்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறிவருகிறார். வருகிற தேர்தலிலும் இதையே பிரதான கோஷமாகவும் எழுப்ப அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில்அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் ஒன்று உயர்ந்துள்ளது, எந்தவிதத்தில் திமுக கூட்டணிக்கு உதவப் போகிறது என்பதைப்பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications