வீரப்பனைக் கொன்றது எப்படி? கூட்டாளி வாக்குமூலம்
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு சயனைட் விஷத்தைக் கொடுத்தது எப்படி என்பது குறித்து வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியாகவிளங்கிய பூசாரி மணி வீடியோவில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் குறித்த தகவல் கசிந்துள்ளது.வீரப்பனுக்கு மிகவும் நெருங்கியவர்களாக திகழ்ந்த பூசாரி மணி, உறவினர்கள் பழனி, அம்மாசி ஆகியோரை வளைத்தஅதிரடிப்படையினர் அவர்களுக்குப் பண ஆசை காட்டி வீரப்பனுக்கு சயனைட் கலந்த உணவைத் தந்து வீரப்பனைக் கொன்றுவிட்டதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முத்துலட்சுமி அதுதொடர்பான வீடியோ கேசட்டையும் தாக்கல்செய்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முத்துலட்சுமியின் இந்தப் புகார் அதிரடிப்படையினர் மத்தியில் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோவில் பழனி என்ன கூறியுள்ளான் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த வீடியோவில் பழனி கூறியுள்ளதாவது: என் வீட்டுக்கு நாலைந்து பேர் வந்தனர். வீரப்பனை உயிருடன் பிடித்துக் கொடுக்கஉதவுமாறு கேட்டனர். அதற்கு நான் உயிருடன் பிடிப்பது முடியாது, வேண்டுமானால் பிணமாக பிடித்துத் தருகிறேன் என்றேன்.அதற்கு அவர்கள் சரி என்றார்கள்.
சரி, முன் பணம் கொஞ்சம் தேவை என்றேன். அவர்கள் பணம் கொடுத்தார்கள். பிறகு வீரப்பனை வீட்டுக்கு வர வழைத்தேன்.அதற்கு முன்னதாக மோரில் சயனைட் விஷத்தைக் கலந்து வைத்திருந்தேன்.
சிறிது நேரத்திலேயே வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சேதுமணி, சந்திரகெளடா ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு விஷம்கலந்த மோரைக் கொடுத்தேன். நான்கு பேரும் அதைக் குடித்தனர். சிறிது நேரத்திலேயே நான்கு பேரும் சுருண்டு விழுந்துஇறந்தனர்.
அவர்கள் இறந்த பின்னர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன். இரவு 7 மணி போல போலீஸார் வந்தனர். நான்கு பேரின்உடல்களையும் எடுத்துச் சென்றனர். வீரப்பன் வைத்திருந்த துப்பாக்கியை மட்டும் நான் மறைத்து வைத்துக் கொண்டேன். பின்னர்விஜயக்குமார் வந்து துப்பாக்கி குறித்துக் கேட்டார். அதற்கு வீரப்பன் துப்பாக்கி கொண்டு வரவில்லை என்று கூறி விட்டேன்.ஆனால் அந்தத் துப்பாக்கி இப்போது என்னிடம் தான் இருக்கிறது என்று பழனி பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, முத்துலட்சுமியால் புகார் கூறப்பட்டுள்ள பழனி, அம்மாசி மற்றும் மணி ஆகியோர் திடீரென தலைமறைவாகிவிட்டனர். அதிரடிப்படையினரின் பிடியில் அவர்கள் சிக்குவதைத் தவிர்க்கவே 3 பேரும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
முத்துலட்சுமி புகார் கூறியுள்ள மணி, அம்மாசி, பழனி ஆகியோரை பிடித்து தங்களது கஸ்டடிக்குக் கொண்டு வர அதிரடிப்படைவீரர்கள் களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து 3 பேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இவர்கள் அதிரடிப்படையினர் கையில் சிக்கினால் கதைகந்தலாகி விடும் என்பதால் 3 பேரையும் முத்துலட்சுமி தரப்பே மறைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம்,பிரச்சினையில் சிக்கி விட்ட பயத்தில், 3 பேரும் தாங்களாகவே தலைமறைவாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த மூன்று பேரையும் அதிரடிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்று தெரிகிறது.