மோனோ ரயில்: உயர்நீதிமன்றத்தில் பாமக வழக்கு
சென்னை:
தமிழக அரசின் மோனோ ரயில் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி வழக்குதொடர்ந்துள்ளார்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு முன்புதெரிவித்திருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டு மோனோ ரயில் திட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாகஉலகளாவிய டெண்டரும் கோரப்பட்டுள்ளது.இந்த நிலையில் மோனோ ரயில் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமக, இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்துள்ள மனுவில், மோனோ ரயில் திட்டம் தொடர்பாக பல்லவன்போக்குவரத்துக் கழக நிபுணர் குழு வழங்கியுள்ள ஆய்வறிக்கை அனுபவமற்றவர்களால் உருவாக்கப்பட்டது. மோனோ ரயில்திட்டம் குறித்து டெல்லி மெட்ரோ அமைப்பிடம் தமிழக அரசு கலந்தாலோசிக்கவில்லை.
மேலும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய ரயில்வே துறை, சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றிடம் முன் அனுமதிபெறப்படவில்லை.
மோனோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால், ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ. 100 கோடி முதல் 150 கோடிவரை செலவாகும். இது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆகும் செலவை விட 30 சதவீதம் கூடுதல் ஆகும்.
மோனோ ரயில் திட்டத்தை 100 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் செயல்படுத்த முடியாது என்பது உலக அளவில் உள்ளநடைமுறை. இந்த நிலையில் 496 கிலோமீட்டர் தொலைவுக்கு இத்திட்டத்தை செயல்படுத்துவது எப்படி சாத்தியமாகும்?
எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் மணி. இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷாதலைமையிலான பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.