27ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை:
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் மாநில தேர்தல் அலுவலகம் தீவிரமாக உள்ளது. தற்போது 234 தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலை சரி பார்த்து அதில் பெயர் விடுபட்டுப் போனவர்கள், வேறு திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வரும் 11ம் தேதி வரை அதை செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தற்போது இந்த கால அவகாசம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, 12ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ம் தேதி அதாவது நாளையும், நாளை மறுநாளும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாம்களுக்கு அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் சென்று தங்களது பெயர் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 27ம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.