பலத்த பாதுகாப்பில் 10 ரயில் நிலையங்கள்
சென்னை:
சென்னை, மதுரை, கோவை உள்பட 10 ரயில் நிலையங்களில் இன்று குண்டுகள் வெடிக்கும் என்ற தீவிரவாதிகள் மிரட்டல்விடுத்துள்ளதையடுத்து அந்த ரயில் நிலையங்களில் இன்று அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் ரயில் நிலைய மேலாளருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.அதில் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் 3ம் தேதி (இன்று) சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, சேலம்,கரூர், திருநெல்வேலி, ஓசூர், தர்மபுரி ஆகிய 10 ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று காலை முதல் இந்த ரயில் நிலையங்கள் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இந்த ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகின்றன. பயணிகளும், அவர்கள் கொண்டு வரும் உடமைகளும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.