மயங்கி விழுந்த ராமதாஸ்
தர்மபுரி:
தனித்துப் போட்டியிட வேண்டியதுதானே என்று சிலர் (விஜயகாந்த்) கேட்டு வருவதற்கு பதில் சொல்லவே கூடாது என்ற முடிவில் நானும், மற்ற நிர்வாகிகளும் உள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் நடந்த தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், 30 சீட் வேண்டும், 50 சீட் வேண்டும் என்று கூறுபவர்கள் (பாமக, மதிமுக, காங்கிரஸ்) தனித்து நிற்க வேண்டியதுதானே? அந்தத் தைரியம் இருந்தால் கூட்டணிக்கு ஏன் துடிக்க வேண்டும் என்று சாடியிருந்தார்.இதுகுறித்து தர்மபுரி வந்த ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
பாமக தனித்துப் போட்டியிட வேண்டியதுதானே என்று சிலர் பேசி வருகின்றனர். அது மாதிரியானவர்களுக்கெல்லாம் பதிலே அளிக்கக் கூடாது என்று நானும், எனது கட்சி நிர்வாகிகளும் முடிவெடுத்துள்ளோம்.
எல்லாக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடட்டும். அப்படி ஒத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் முதல் ஆளாக நாங்கள் கையெழுத்துப் போடுகிறோம்.
முதலில் மக்கள் கூட்டணி என்றார் ஜெயலலிதா. இப்போது கதவுகள் திறந்தே இருக்கிறது என்கிறார். தோல்வி பயம் வந்துவிட்டதால் அவர் தடுமாற ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெற்றிப் பாதையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
பாமகவைப் பொருத்தவரை வரும் சட்டசபைத் தேர்தலில் தற்போதைய உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதலாக கிடைக்கும் தொகுதிகளில் புதுமுக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார் ராமதாஸ்.
மயங்கி விழுந்தார்:
தர்மபுரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராமதாஸ், மேல் நிலைப்பள்ளி ஒன்றில் நடந்தநிநகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் கார் மூலம் தான் தங்கியிருந்த சுற்றுலா மாளிகைக்குத் திரும்பினார்.












Click it and Unblock the Notifications