விஜயகாந்த் பிரச்சாரம் பாதியில் ரத்து
கரூர்:
கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மீண்டும் தொண்டை வலி ஏற்பட்டு பேச முடியாமல் அவதிப்பட்டார் நடிகர் விஜயகாந்த்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரான விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் இப்போதே குதித்து விட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று சினிமாவில் பேசுவது மாதிரியே வசனம் பேசி வரும் விஜயகாந்துக்கு தொண்டை ஒத்துழைப்பு தர மறுக்கிறது.தொண்டை வலியால் தனது பிரச்சாரத்தை அவ்வப்போது ரத்து செய்து வருகிறார்.
இந் நிலையில் கரூர் மாவட்டத்தில் அவர் 2 நாள் பிரசாரம் மேற்கொண்டார்.
சோமூர், பசுபதிபாளையம், தொழிற்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அவர் பேசினார். அப்போது சரிவர பேச முடியாமல் அவதிப்பட்டார். தொண்டை அடிக்கடி கமறியது.
இதையடுத்து எனக்கு தொண்டை வலி உள்ளது. எனவே என்னால் சரியாக பேச முடியவில்லை. தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றவர், அடுத்து குளத்துப்பாளையம் என்ற இடத்தில் சைகை மொழியில் பேசினார்.
இதையடுத்தும் தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டதால் கரூர் பரமத்தி, வாங்கல், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, ஈசநத்தம், சின்ன தாராபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் மேற்கொள்ள இருந்த பிரசாரத்தை ரத்து செய்தார் விஜயகாந்த்.
இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.