நுழைவுத் தேர்வு ரத்து: சிபிஎஸ்சி மாணவர் வழக்கு
சென்னை:
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் நிஷாந்த் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.
கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் டூ பயிலும்மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு கிடையாது என அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுனர் பர்னாலா ஒப்புதலும் அளித்து விட்டார்.இதன்படி தமிழக அரசுப் பாடத் திட்டம் அல்லாத (சிபிஎஸ்இ உள்ளிட்ட) பிற பாடத் திட்டங்களின் கீழ் பயிலும் பிற பிளஸ் டூமாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
இந் நிலையில் சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் பிளஸ் டூ படிக்கும் நிஷாந்த் என்ற மாணவர் நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்குதொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நிஷோந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, நுழைவுத் தேர்வு நடத்தித்தான் தொழில்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைமேற்கொள்ள வேண்டும். இதுதான் பல ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையாகும்.
கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்து நுழைவுத் தேர்வுநடத்தியே மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந் நிலையில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு ரத்து செய்ப்பட்டுள்ளது. இதுபாரபட்சமான முடிவாகும்.
அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வு எழுதியே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர்க்கப்படவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.