சென்னை இழந்த 15 லட்சம் வேலை வாய்ப்புகள்
பெங்களூர்:
ரூ. 9,000 கோடி முதலீட்டில் சென்னையில் அமையவிருந்த சிப் மற்றும் செமி கண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலை ஜெயலலிதா அரசின் அலட்சியப் போக்கினால் ஹைதராபாத்துக்குப் போய்விட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
பேப் இந்தியா நிறுவனம் சுமார் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் பேப் சிட்டி என்ற மாபெரும் தொழிற்சாலையை அமைக்க தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புனே ஆகிய இடங்களை ஆய்வு செய்து வந்தது.2015ம் ஆண்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 15 லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் மாபெரும் திட்டம் இது.
கர்நாடகத்தில் கடந்த இரு மாதங்களாக நிலவி வந்த அரசியல் ஸ்திரமற்ற நிலையால், இந்த நிறுவனம் வைத்த கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. இதையடுத்து கர்நாடகம் வேண்டாம் என இந்த நிறுவனம் முடிவு செய்தது.
புனேவில் சர்வதேச விமான நிலையம் இல்லாததால் அதையும் நிராகரித்த செம் இந்தியா நிறுவனம் அடுத்ததாக சென்னை அல்லது ஹைதராபாத் என்ற முடிவுக்கு வந்தது.
இந் நிலையில் இந்த தொழிற்சாலையை அமைக்க பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கியது ஆந்திரம். ஹைதராபாத் விமான நிலையத்தின் அருகில் 1,500 ஏக்கர் நிலம், குறைந்த கட்டணத்தில் மின்சாரம், கபினி நீர்த் தேக்கத்தில் இருந்து நீரை சுத்திகரித்து தொழிற்சாலைக்கு வழங்க தனி சுத்தகரிப்பு ஆலை, மேலும் சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவதாக பல சலுகைளைத் தந்தார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி.
இதையடுத்து சென்னையைத் தவிர்த்துவிட்டு ஹைதராபாத்தில் இந்த நிறுவனத்தை அமைப்பது என பேப் இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தத் தகவலை பெங்களூரில் நிருபர்களிடம் தெரிவித்த தயாநிதி மாறன், இந்தத் தொழிற்சாலையை சென்னைக்குக் கொண்டு வர தமிழக அரசு போதிய முயற்சிகள் செய்யவில்லை. ஆந்திராவும் கர்நாடகமும் தான் பந்தயத்தில் இருந்தன.
அலட்சியப் போக்கால் தமிழக அரசு இந்த மாபெரும் திட்டத்தை இழந்துவிட்டது என்றார்.
பின்னர் கிருஷ்ணரிகிரி அருகே நிருபர்களிடம் பேசிய தயாநிதி, இந்தத் தொழிற்சாலையின் கோரிக்கைகள் குறித்து தமிழக, ஆந்திர, கர்நாடக முதல்வர்களுக்கு கடிதம் எழுதினேன். இதில் அதி வேகமாக செயல்பட்டவர் ஆந்திர முதல்வர் ரெட்டி தான்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2 முறை கடிதம் அனுப்பியும் அவர் சரியான முறையில் பதில் தரவில்லை. இந்த அலட்சியத்தால் தான் தொழிற்சாலை ஆந்திராவுக்குப் போய்விட்டது என்றார்.