தமிழக காங் தலைவர் பதவி: வாசனே நீடிப்பார்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசனை மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழககாங்கிரஸ் கட்சிக்கான பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான வீரப்ப மொய்லி இன்று சென்னை வந்தார்.விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டியினரும் போட்டி போட்டு அவரை வரவேற்றனர்.செய்தியாளர்களிடம் மொய்லி பேசுகையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை மாற்றுவது என்ற எண்ணம் இப்போதைக்குகட்சி மேலிடத்திடம் இல்லை. கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகஉள்ளனர்.
திமுக கூட்டணிக் கட்சிகளிடையே எந்தவித பூசலும் இல்லை. அனைத்துக் கட்சிகளும் நல்லுறவு கொண்டுள்ளன. அதில்சந்தேகமே வேண்டாம். தொகுதிப் பங்கீடு குறித்து குழு அமைத்து திமுகவுடன் பேச்சு நடத்தப்படும் என்றார் மொய்லி.
மொய்லி இவ்வாறு கூறினாலும், வாசனை தலைவர் பதவியிலிருந்து அகற்ற எதிர்கோஷ்டினர் படு தீவிரமாக உள்ளனர்.ஒருவருக்கு ஒரு பதவி என்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அவர்கள் தங்களது துணைக்கு அழைத்துள்ளனர்.
இதை வலியுறுத்தி மத்திய அமைச்சர் பதவி வகிக்கும் வாசனை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். வேறு புதிய தலைவரைதேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்கோஷ்டியினர் வற்புறுத்தி வருகின்றனர்.
தலைவர் பதவிக்கு எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், தமிழ்நாடு வணிகர் காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் உள்ளிட்ட சிலதலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் வாசனை தேர்தல் நேரத்தில் மாற்ற மேலிடம் தயாராக இல்லை என்றுதெரிகிறது.