விஜய்காந்த் கட்அவுட்: ரசிகர்கள் செருப்பு மாலை
கோவை:
தேர்தல் பிரசாரத்திற்காக தங்களது ஊருக்கு நடிகர் விஜயகாந்த் வராததால், ஆத்திரமடைந்த அவரது ரசிகர்களும், தே.மு.தி.க.தொண்டர்களும் விஜயகாந்த்தின் கட்-அவுட்டுக்கு செருப்பு மாலை அணிவித்து கோபத்தை வெளிப்படுத்தினர். ரசிகர்மன்றங்களும் கலைக்கப்பட்டன.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டமாகபிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து பேசுவதால் அடிக்கடி தொண்டை கட்டிக் கொண்டு அவதிப்படுகிறார் விஜயகாந்த்.இதனால் சில ஊர்களை அவர் தவிர்த்து விடுகிறார்.அத்தோடு ஆங்காங்கே கட்சியில் ஜாதிச் சண்டைகளும், கோஷ்டிச் சண்டைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் இந்தசண்டைப் பகுதிகளுக்குச் செல்லாமல் தனது பயணத்தை ரத்து செய்து வருகிறார்.
இந் நிலையில் கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், சனிக்கிழமை இரவு பொள்ளாச்சி அருகேஉள்ள திப்பம்பட்டி என்ற கிராமத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திப்பம்பட்டி கிராம பொது மக்களும், விஜயகாந்த் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் ஆவலோடு விஜயகாந்த்தைஎதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
கை காசைப் போட்டும், அங்கே இங்கே பணம் திரட்டியும் காலையில் இருந்தே மைக் செட் கட்டி, பகலிலேயே டியூப் லைட்,சீரியல் செட் எல்லாம் எரிய விட்டு ஜெகஜெகவென தலைவரின் வருக்ைககாகக் காத்திருந்தனர்.
ஆனால் திடீரென திப்பம்பட்டி நிகழ்ச்சியை விஜயகாந்த் ரத்து செய்து விட்டு நேராக உடுமலைப்பேட்டை போய் விட்டார்.இதனால் திப்பம்பட்டி பொது மக்களும், விஜயகாந்த் ரசிகர்களும் ஆத்திரமடைந்தனர்.
கட்சிக் கொடிகள், பேனர்கள், விஜயகாந்த்தின் கட்-அவுட் ஆகியவற்றை அடித்து அவர்கள் நொறுக்கினர். பின்னர் அவற்றைதீயிட்டுக் கொளுத்தினர். விஜயகாந்த்தின் கட் அவுட்டுக்கு சிலர் செருப்பு மாலையும் போட்டு தலைவர் மீதான தங்களதுமரியாதையை வெளிப்படுத்தினர்.
தங்களை மதிக்காமல் நடந்து கொண்ட விஜயகாந்த்தைக் கண்டித்து ஊரில் உள்ள ரசிகர் மன்றங்களைக் கலைத்து விடவும்ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு கிராமத்திற்கு விஜயகாந்த் போகாததால், ஆவேசமடைந்த ரசிகர்களும்,பொதுமக்களும் விஜயகாந்த் கட்சி கொடிகள், பேனர்களை கிழித்து, விஜயகாந்த்தின் கார் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதுநினைவிருக்கலாம்.