அதிமுக சீட் வேணுமா?- நாளையே கடைசி
சென்னை:
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பிக்க புதன்கிழமையே கடைசி நாள் என்பதால் டிக்கெட் கேட்டு விண்ணப்பம் கொடுப்போரின் எண்ணிக்கை அலைமோதுகிறது.
அதிமுக சார்பில் தமிழகம், புதுவை மற்றும் கேரளம் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு கடந்த 1ம் தேதி முதல் தலைமைக் கழக அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.முதல் நாளிலிருந்தே ஆயிரக்கணக்கானோர் சீட் கேட்டு விண்ணப்பங்களைக் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு சீட் கேட்டு மட்டும் 2,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட அனுமதி கோரி விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
இதுதவிர சமீபத்தில் கட்சியில் சேர்ந்துள்ள நடிகர்கள் செந்தில், ஆனந்தராஜ், ஏற்கனவே எம்.எல்.ஏவாக உள்ள நடிகர் ராதாரவி ஆகியோரும் சீட் கேட்டு மனு அளித்துள்ளனர்.
விண்ணப்பங்களை அளிக்க நாளையுடன் அவகாசம் முடிகிறது. இதனால் ஏராளமானோர் போட்டி போட்டு தங்களது விண்ணப்பங்களைக் கொடுத்து வருகின்றனர். இதுவரை விண்ணப்பங்கள் வழங்கியுள்ளோரின் எண்ணிக்கை 12,000த்தைத் தாண்டி விட்டது. (ஒரு விண்ணப்பத்துக்கு டெலுத்தப்பட்டுள்ள கட்டணம் ரூ. 10,000, அப்ப வசூலை கணக்கு போடுங்க)
இன்று மயிலாப்பூரில் போட்டியிட தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியும், ஏற்கனவே அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தவருமான டாக்டர் மைத்ரேயன் மனு அளித்தார். முன்னாள் அமைச்சர் அனந்தனும் மனு கொடுத்தார்.
திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்பி நடிகர் ஜெயசூர்யகாந்த்ஜி (எந்தப் படம்?) என்பவர் மனு கொடுத்துள்ளார். தொடர்ந்து ஏராளமானோர் மனு அளித்து வருகின்றனர். மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை எப்படியும் 15,000த்தைத் தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் கட்சிகளிலேயே அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளது அதிமுகவுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.