கோவை குண்டு வெடிப்பு-சாட்சி விசாரணை ஓவர்
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சிகள் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாநகரில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது. தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல்-உம்மா தலைவர் பாஷா, கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 167 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் லியாசுர் ரஹ்மான் என்பவர் அப்ரூவர் ஆகியுள்ளார். தஸ்தகீர் என்பவர் இறந்து விட்டார். மற்றவர்கள் மீது கடந்த 2000மாவது ஆண்டு 16,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2000மாவது ஆண்டு ஜூன் 13ம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்கியது.
அரசுத் தரப்பு சாட்சிகள் 2,600 பேரில் 1,312 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டதால் அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வந்தன.
இந்த சாட்சிகள் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. விரைவில் அனைத்து சாட்சிகளிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு, இரு தரப்பு வழக்கறிஞர்கள் இறுதி விவாதம் நடத்திய பின்னர் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தொடர் வெடிகுண்டு வெடிப்பு நடந்து 8 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய தினமே சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications