காத்தவராயனும், காளிமுத்துவும்: கருணாநிதி
சென்னை:
காத்தவராயன், ஆர்யமாலா கதையைத் திரித்து காளிமுத்து புதுக் கதை புனைகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொடா சட்டம் என்ன, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டமா என்று கேட்டுள்ளார் காளிமுத்து.ஏதோ, வாஜ்பாய் அரசு இதைக் கொண்டு வராதது போலவும், மன்மோகன்சிங் அரசுதான் இதைக் கொண்டு வந்தது போலவும், இன்றைய மத்திய அரசு மீது மாசு தூவிடும் மாய்மாலத்தில் ஈடுபட்டுள்ளார் காளிமுத்து.
ஆர்யமாலாவை காத்தவராயன்தான் மீட்டெடுத்து வந்தான் என்று காளிமுத்து கூறியுள்ளார். இது தவறு. ஆர்யமாலாவை சிறையெடுத்ததே காத்தவராயன்தான். கதையைத் திரித்து புதுக் கதை புனைவது காளிமுத்துவுக்கு புதிதல்ல என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பிரச்சினை தீர்ப்பு குழு:
இதற்கிடையே தேர்தல் சமயத்தில் கட்சியினரிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டசபைத் தேர்தலையொட்டி ஆங்காங்கே மாவட்டங்களில் எழும் பிரச்சினைகள் குறித்து தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனிக்கவும், நான்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைப்புச் செயலாளர் விடுதலை விரும்பி, டெல்லி சம்பத், பெ.வீ.கல்யாணசுந்தரம், சிவப்பிரகாசம் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர்.
தேர்தல் தொடர்பான பிரச்சினைகள், விவரங்களுக்கு இக்குழுவை கட்சியினர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications