கதவு திறந்து கூவும் ஜெயலலிதா: அன்பழகன்
விழுப்புரம்:
தமிழகத்தில் தமிழும், தமிழர்களும் வாழ வேண்டும் என்றால் கருணாநிதியே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில், முரண்பாடுகளின் மொத்த உருவம் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில், பேச ஆள் வேண்டுமே என்பதற்காக காளிமுத்துவின் சபாநாயகர் பதவியைப் பறித்து விட்டு அவரை அவைத் தலைவராக்கியுள்ளார்.மக்களுடன் தான் எனது கூட்டணி, வேறு யாரும் வேண்டாம் என்று முழங்கி வந்தார் ஜெயலலிதா. 7 கட்சிக் கூட்டணி என்று கிண்டலடித்தார். ஆனால், இப்போது கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன, வாருங்கள், வாருங்கள் என்று கூவி வருகிறார். ஆனால் வருவதற்குத்தான் யாரையும் காணோம்.
திமுக கூட்டணியில் உள்ள வைகோ, வாசன், வரதராஜன், நல்லகண்ணு போன்றோர் அதிமுகவின் அழைப்பை எதிர்பார்த்திருப்பதாக வதந்திகள் பரப்புகிறார்கள். ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட தலைவர்கள் அல்ல.
கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவதை சில ஆதிக்க சக்திகள் எதிர்க்கின்றன. ஜெயலலிதா என்ன தவறு செய்தாலும் அதை சில பத்திரிக்கைகள் பெரிதுபடுத்துவதில்லை. தொடர்ந்து திமுக கூட்டணிக்கு எதிரான செய்திகளையே பெரிதுபடுத்துகிறார்கள்.
தமிழகத்தில் தமிழும், தமிழர்களும் வாழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி கருணாநிதியே மீண்டும் முதல்வராக வேண்டும் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications