திமுகவிடம் கடிதம் தர கூட்டணி கட்சிகள் தாமதம்
சென்னை:
திமுக கூட்டணியில் தாங்கள் பெற விரும்பும் தொகுதிகளின் விவரம் அடங்கிய கடிதத்தை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமேகருணாநிதியிடம் வழங்கியுள்ளது. மற்ற கட்சிகள் இதுவரை கடிதம் வழங்கவில்லை.
இதனால் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தாமதம் ஆகியுள்ளது.கடந்த 8ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் எண்ணிக்கை, போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை 15ம் தேதிக்குள் (நேற்று) வழங்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இன்று முதல் கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சு நடத்தி தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆளுக்கு எத்தனை சீட் என்ற விவரத்தை, திருச்சியில் மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டில் கருணாநிதி அறிவிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால், 8ம் தேதி கூட்டத்தில் ஒப்புக் கொண்டபடி முக்கிய கட்சிகள் எதுவும் கருணாநிதியிடம் பட்டியலைத் தரவில்லை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே கருணாநிதியிடம் கடிதம் தந்துள்ளது.
அதில் தங்களது கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள 25 தொகுதிகளின் பட்டியல் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே லீக்குக்கு வழங்கப்படவுள்ளது.
மற்ற கட்சிகள் பட்டியலை வழங்கி முடிக்க இரு வாரங்கள் வரை ஆகிவிடும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கிருஷ்ணசாமி பதவியேற்று பின்னர் அனைத்து கோஷ்டிகளுடனும் பேச்சு நடத்தி, எல்லா கோஷ்டிகளுக்கும் இடம் தரும் வகையில், தொகுதிப் பட்டியலை தயாரித்து, டெல்லிக்கு அனுப்பி, அனுமதி வாங்கி, பின்னர் தான் கருணாநிதியிடம் அதைத் தர முடியும். இதற்கு குறைந்தது 2 வார காலமாகும்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து இப்போது தான் டிஸ்சார்ஜ் ஆகி தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வில் இருக்கிறார். அப்படியே தொகுதிப் பட்டியலையும் தயாரித்து வருகிறார். அந்தக் கடிதம் இந்த வாரத்திலேயே கருணாநிதிக்கு வந்து சேரும் என்று தெரிகிறது.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை வரும் 18ம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்துகிறது. அதன் பிறகே தொகுதிப் பட்டியலை தயாரித்து அக் கட்சி திமுகவிடம் வழங்கப் போகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் தீவிரமான அதிமுக ஆதரவாளர். அவர் பட்டியல் தயாரிக்கவே இன்னும் ஆர்வம் காட்டவில்லை. மற்ற தோழர்கள் தான் திமுக கூட்டணி என்பதில் தீவிரமாக இருந்து பட்டியலை தயாரித்து வருகின்றனர்.
மிக முக்கிய, சஸ்பென்ஸ் பார்ட்டியாக மாறிவிட்ட வைகோ இன்னும் கூட்டணி விஷயத்தில் முடிவுக்கு வரவில்லை. அதிமுகவா, திமுகவா என்ற கருத்தில் கட்சி சரி சமமாகப் பிளவுபட்டுள்ளது. ஒரு சாரார் அதிமுக கூட்டணியே வேண்டும் (கூடுதல் சீட் கிடைக்கும் என்பதால்) என்று தீவிரமாக உள்ளனர். மூத்த தலைவர்களோ திமுக கூட்டணியில் தொடரலாம் என்கின்றனர்.
இதனால் குழப்பத்தில் இருக்கும் வைகோவுக்கு திமுகவிடம் சுமார் 50 சீட்கள் வரை கேட்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மதிமுகவுக்கு 18 முதல் 22 சீட்கள் வரையே திமுக தரும் என்று கூறப்படுகிறது.
கருணாநிதியிடம் கொடுக்கப் போகும் தொகுதி கேட்பு கடிதம் என்பது கூட்டணியில் மதிமுக தொடரப் போகிறதா இல்லையா என்பதை முடிவு செய்யும் கடிதம் என்பதால் அதை உடனடியாக வைகோ தருவார் என்று தோன்றவில்லை.
நாளை கூடும் பேச்சுவார்த்தை குழு:
இதற்கிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடக்கிறது.
இதுதொடர்பாக கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்டுள்ள குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடுகிறது. இதில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகளுடன் எந்த வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications