குண்டாஸ் செல்லாது: தனசேகரனை விடுவிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை:
எம்.ஜி.ஆர். வெள்ள நிவாரண கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக குண்டர் சட்டத்தின் கீழ் திமுக மாநகராட்சி கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டது செல்லாது என்றும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த கன மழை மற்றும் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியது. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறக் கூடியிருந்த மக்களிடையே ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக இறந்தனர்.அரசு மற்றும் போலீசாரின் கையாலாக தனத்தால் அச் சம்பவம் நடந்தது. ஆனால்,
இதற்குத் திமுகவினர் பரப்பிய வதந்தியே காரணம் என முதல்வர் ஜெயலலிதா கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் அதற்குள் தனசேகரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவரால் வெளியே வர முடியவில்லை.
இந் நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தனசேகரன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர்.
கீழ் நீதிமன்றம் மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் குண்டர் சட்டத்தின் கீழ் மனுதாரரை கைது செய்தததை ஏற்க முடியாது. எனவே குண்டர் சட்டத்தின் கீழ் மனுதாரர் கைது செய்யப்பட்டது செல்லாது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.
கீழ் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைப்படி தன்சேகரன் நாகர்கோவிலில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
இதன் மூலம் தனசேகரன் விடுதலை ஆகிறார். ஏற்கனவே இவரது வழக்கில் உச்ச நீதிமன்றத்திலும் ஜெயலலிதா அரசு வாங்கிக் கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications