ஜெ பிறந்த நாள்: 1 வாரம் பொதுக்கூட்டம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் 58வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரைபொதுக் கூட்டங்கள் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வரும் 24ம் தேதி 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் ழுவதும் ஒரு வார காலம் பொதுக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதுதொடர்பாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவி, இதய தெய்வம், அம்மாவின் 58வது பிறந்த நாளையொட்டி 24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை தமிழகம் முழுவதும், ஒன்றிய, நகர, மாநகர அளவில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
இக் கூட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பிற நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் தவிர கேரளம், புதுவை, கர்நாடகம், மகாராஷ்டிரம் (சிக்கிம், பூடான் எல்லாம் இல்லையா?) உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இந்தப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் 24ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில், அவைத் தலைவர் காளிமுத்து கலந்து கொண்டு பேசவுள்ளார். கும்பகோணத்தில் திண்டுக்கல் சீனிவாசன், திருவொற்றியூரில் ஓ.பன்னீர்செல்வம், மதுராந்தகத்தில் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் பேசவுள்ளனர்.