ஜெயலட்சுமியின் தேர்தல் ஆசை!!!
மதுரை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட எனக்கும் ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார் ஜெகஜால ஜெயலட்சுமி.
20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டிப் படைத்த ஜெயலட்சுமி இப்போது டி.எஸ்.பி.ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் நகைப்பட்டறை அதிபர் முருகவேலிடம் ரூ. 3.5லட்சம் பணத்தை மோசடி செய்தது தொடர்பான வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற எவரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை. இதன் காரணமாக, ஜெயலட்சுமிக்கு இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படவில்லை.
கடந்த முறை நீதிமன்றம் வந்தபோது பெரும் சோகமயமாக காணப்பட்ட ஜெயலட்சுமி இந்த முறை படு சந்தோஷமாகக் காணப்பட்டார். கழுத்தில் எந்தவித நகையும் இல்லாமல், பளிச்சென வெள்ளை நிறச் சேலையில் வந்த ஜெயலட்சுமி, தனது வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தியபடி இருந்தார்.
வழக்கு விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பின்னர் வெளியே வந்த ஜெயலட்சுமி வேனில் அமர்ந்தபடி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ரொம்ப ஆசையாக உள்ளது. அதற்கான வழிமுறைகள் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆலோசிப்பேன்.
ஜாமீன் கிடைத்துவிட்டால், என்னைப் போன்ற பெண்களுக்கு ஏதாவது கட்சி ஆதரவு தெரிவித்தால், அந்தக் கட்சியில் சேர்ந்து போட்டியிட முன் வருவேன் என்றார் சிரித்தபடி.