காளிமுத்து பேச்சு: வைகோவுக்கு திமுக கேள்வி
சென்னை:
வைகோவிடம் தொலைபேசியில் பேசி வருவதாக அடிக்கடி காளிமுத்து கூறுவதற்கு வைகோ சரியான விளக்கம் அளித்து இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் காளித்து சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில், பேசுகையில், நானும், வைகோவும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்கிறோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட பேசினோம். அவர் என்ன பேசினார் என்பதை சொன்னால் கருணாநிதி தாங்க மாட்டார், காணாமல் போய் விடுவார் என்றார்.இதற்கு வைகோ மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. அமைதியாகவே இருக்கிறார். வைகோவின் இந்த ஆழ்ந்த அமைதி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வைகோவிடம் விளக்கம் கேட்கும் வகையில் ஆற்காடு வீராசாமி மூலமாக திமுக விடுத்துள்ள அறிக்கை விவரம்:
திருவண்ணாமலையில் நடந்த அதிமுக கூட்டத்தில் காளிமுத்து பேசுகையில், துரியோதனன் என்னும் கருணாநிதிக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், இந்த சகாதேவன் (காளிமுத்து) அந்தக் கர்ணனிடம் (வைகோவிடம்) பேசினேன்.
அந்தக் கர்ணனும் நேற்று கூட இந்த சகாதேவனுடன் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை கூறினால் இந்த துரியோதன கருணாநிதி காணாமல் போய் விடுவார் என்று பேசியுள்ளார்.
திறந்து வைத்திருக்கும் (கூட்டணி) கதவை மூட வேண்டுமானால் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் (அதிமுக) முடிவெடுத்திருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இவர்களுடைய பேச்சுக்களின் இடையிடையே வைகோவிடம் டெலிபோனில் பேசியதாக காளிமுத்து கூறுவது, திமுக கூட்டணிக்குள்ளே குழப்பம் விளைவிக்கின்ற தில்லுமுல்லு வேலையாக இருக்கிறது என்பதையும் அவரது பேச்சுக்களைத் தொடர்ந்து படித்து வருகின்றவர்கள் நன்றாக அறிவார்கள்.
இதுபோன்ற அவதூறான பேச்சுக்கள் மக்களிடையே தேவையில்லாத சந்தேகத்தை, குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் வைகோ பேசியபோது, திமுக கூட்டணியில்தான் தான் இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும் தற்போது காளிமுத்து பேசி வருவது குறித்து சரியான விளக்கத்தை அளித்து குழப்பங்களுக்கு வைகோ முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் வீராசாமி.
கிட்டத்தட்ட வைகோவிடம் விளக்கம் கேட்கும் வகையில் தான் வீராசாமியின் இந்த அறிக்கை உள்ளதாக மதிமுகவினர் கடுப்படைந்துள்ளனர்.