விடுதலையானார் தனசேகரன்-புஸ் ஆன புரளி
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசல் பலி சம்வத்தையடுத்து தமிழக அரசால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் தனசேகரன் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் அதிரடித் தீர்ப்புகளையடுத்து சென்னை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்ற நிபந்தனைப்படி அவர் நாகர்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனசேகரன், பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதே போல தனசேகரன் புரளி பரப்பியதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை, நடந்த நெரிசல் சம்பவத்துக்கு தமிழக அரசே முழுப் பொறுப்பு என உச்ச நீதிமன்றம் சாட்டையடி தந்தது.
இதையடுத்து வேறு வழியின்றி தனசேகரனை இன்று தமிழக அரசு விடுதலை செய்தது.
இன்று காலை அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அவரை நாகர்கோவிலுக்குப் போலீஸார் கொண்டு சென்றனர். அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸார் அவரை விடுவிக்கவுள்ளனர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள ஜாமீன் நிபந்தனைப்படி நாாகர்கோவிலில் தங்கியிருந்து தினமும் அங்குள்ள காவல் நிலையத்தில் தனசேகரன் கையெழுத்திட வேண்டும்.
முன்னதாக தனசேகரனை வரவேற்க சென்னை மத்திய சிறை முன்பு ஏராளமான திமுகவினர் திரண்டிருந்தனர். ஆனால் அவரை நேரடியாக போலீசார் நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றதால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
புரளி பரப்பியதாக புரளி பரப்பி தனசேகரனை தமிழக அரசு குண்டாசில் கைது செய்து நீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.
விடுதலையாகியுள்ள தனசேகரன் ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் வளர்மதியை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications