For Daily Alerts
Just In
ஜெ, திண்டிவனத்துடன் முரளீதரன் சந்திப்பு
சென்னை:
நாம் ஏற்கனவே சொன்னது போல முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் மகனும், ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முரளீதரன் இன்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதா, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
கேரளாவில் காங்கிரசில் இருந்து விலகி தனிக் கட்சி நடத்தும் கருணாகரனுடன் அதிமுக கூட்டணி அமைக்கிறது. அதேபோல, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தியை வைத்து ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பிரிவைத் தொடங்க கருணாகரன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த முரளீதரன் இன்று சென்னை வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சென்று சந்தித்த முரளீதரன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், தளவாய் சுந்தரம், கேரள மாநில அதிமுக செயலாளர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சந்திப்புக்குப் பின்னர் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கூட்டணி தொடர்பாக முதல்வருடன், முரளீதரன் ஆலோசனை நடத்தினார். தொகுதிப் பங்கீடு தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை சந்தித்த பின், நேராக திண்டிவனம் ராமமூர்த்தியின் வீட்டுக்கு முரளீதரன் சென்று அவரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் பூவராகவன், முன்னாள் எம்.பிக்கள் ராஜேஸ்வரன், தண்டாயுதபாணி உள்ளிட்ட திண்டிவனத்தின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலக் கிளையைத் தொடங்குவது குறித்து திண்டிவனத்துடன் முரளீதரன் ஆலோசனை நடத்தினார். முரளீதரன் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திண்டிவனம் பேசுகையில், என்னை மட்டுமல்ல, கட்சியின் முக்கியமான தலைவர்கள், தொண்டர்கள் எல்லாம் என் பக்கம்தான் உள்ளனர். அவர்களையும் காங்கிரஸ் மேலிடம் பட்டியல் போட்டுக் கொண்டு நீக்கட்டும் பார்ப்போம்.தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம். ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சி எனது முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. அவர்களது கட்சியின் தமிழ் மாநிலக் கிளை இங்கு தொடங்கப்படும்.
எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்றார்.
திண்டிவனத்தை இயக்குவதே ஜெயலலிதா தான் என வாசன் தரப்பு கூறுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவிடம் கேட்டதைப் போல துணை முதல்வர் பதவி, 100 சீட்களை திண்டிவனம் கேட்பாரா என்றும் வாசன் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
Comments
Story first published: Friday, February 17, 2006, 5:30 [IST]