பெண் கடத்தல்: எம்எல்ஏ மீது வழக்கு தள்ளுபடி
சென்னை:
அடுத்தவர் மனைவியை சட்டவிரோதமாக தனது பாதுகாப்பில் வைத்திருப்பதாக கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.சிவராஜ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த ஆள்கொணர்வு மனுவில்,
எனது மனைவி ஜெயந்தி. எனக்கும், எனது தந்தை ராமு செட்டியாருக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது. இதைப் பிரச்சனையை தீர்க்க வந்த ரிஷிவந்தியம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராஜுக்கும், எனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து நானும், எனது மனைவியும் பிரிந்து விட்டோம். இந்த நிலையில் எனது மனைவி ஜெயந்தியை, எம்.எல்.ஏ. சிவராஜ் சட்டவிரோதமாக கடத்திச் சென்று அவரது பாதுகாப்பில் வைத்துள்ளார். அவரிடமிருந்து எனது மனைவியை மீட்டுத் தாருங்கள் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச், இரண்டு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி சிவராஜ் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், மூர்த்தியின் மனைவி ஜெயந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் முன் ஜெயந்தியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அரசு வக்கீல் கூறுகையில், ஜெயந்தி சட்டவிரோதமாக எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பில் வைக்கப்படவில்லை என்றார்.
பின்னர் ஜெயந்தியிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது ஜெயந்தி கூறுகையில், என்னை எம்.எல்.ஏ. கடத்திச் செல்லவில்லை. அவரது பாதுகாப்பிலும் நான் இல்லை.கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில்தான் தங்கியுள்ளேன்.
அங்கேயே வேலை செய்து வருகிறேன். திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் என்னையும், எம்.எல்.ஏ.வையும் சேர்த்து வைக்கக் கோரி நான் மனு தாக்கல் செய்தது உண்மைதான் என்றார்.
ஜெயந்தியின் வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எம்எல்ஏ மீது மூர்த்தி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications