திமுகவிடம் கடிதம் தந்துவிட்டது பாமக
சென்னை:
பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் அக் கட்சி வழங்கியுள்ளது.
கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் எண்ணிக்கை, போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை 15ம் தேதிக்குள் வழங்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டிருந்தார்.ஆனால், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே கருணாநிதியிடம் வெளிப்படையாக கடிதம் வழங்கியது.
இதனால் மற்ற கட்சிகள் கடிதம் வழங்கவில்லை என்று கருதப்பட்டது. ஆனால், 13ம் தேதியே தனது கடிதத்தைதிமுகவிடம் கொடுத்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கட்சியின் தலைவரான ஜி.கே.மணி, கருணாநிதியைச் சந்தித்து கடிதத்தை கொடுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.ஆனால், எத்தனை தொகுதிகள் கோரப்பட்டுள்ளன, அவை எவை என்ற விவரத்தை ராமதாஸ் வெளியிடவில்லைய.
அதே நேரத்தில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இன்னும் கடிதத்தைத் தரவில்லை என திமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
காங்கிரஸைப் பொறுத்தவரை கட்சியின் புதிய தலைவரான கிருஷ்ணசாமி பதவியேற்று அனைத்து கோஷ்டிகளுடனும் பேச்சு நடத்தி, மத்திய தலைமையிடம் அனுமதி வாங்கி, பின்னர் தான் கருணாநிதியிடம் கடிதத்தைத் தரவுள்ளார்.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாளை மதுரையில் மாநில மாநாடு நடத்துகிறது. அதன் பிறகே தொகுதிப் பட்டியலை தயாரித்து அக் கட்சி திமுகவிடம் வழங்கப் போகிறது. இக் கட்சி 20 தொகுதிகளைக் கேட்கவுள்ளது.
அதிமுக ஆதரவாளரான இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியனும் திமுகவிடம் 20 இடங்கள் கேட்கத் திட்டமிட்டுள்ளார்.
வைகோவைப் பொறுத்தவரை 35 இடங்கள் என்ற நிலையில் தீவிரமாக உள்ளார். ஆனால், திமுகவிடம் சுமார் 50 சீட்கள் வரை கேட்டு அவர் கடிதம் தரவுள்ளதாகத் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் இன்று கருணாநிதி தலைமையில் நடக்கிறது.
இக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகள், திமுக போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications