அதிமுகவுடன் கைகோர்க்க வைகோ முடிவு
சென்னை:
திமுக கூட்டணியில் இருந்து வைகோ விலகுவது உறுதியாகிவிட்டது. மிக விரைவில் இதற்கான அறிவிப்பைவைகோ வெளியிடவுள்ளார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட குட்டிக் கட்சிகளும் அதிமுக பக்கமாகப் போவதைத் தடுக்க,அவர்களுக்கும் திமுக கூட்டணியில் இடம் தரப்படும் என்று தெரிகிறது.வைகோவைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் தனக்கு எதிர்காலம் இல்லை என்று கருதுகிறார். தேர்தல்நேரத்தில் தன்னைப் பயன்படுத்திவிட்டு திமுக கழற்றிவிடும் என்று நினைக்கிறார்.
நீண்டகால அடிப்படையில் பார்த்தத், ஸ்டாலினுக்கு எதிராகவே தனது எதிர்கால அரசியல் இருக்கும் என்று நம்பும்வைகோ இப்போதே திமுகவிடம் இருந்து தூரமாக செல்ல விரும்புகிறார்.
கடந்த ஜனவரியில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது, ஸ்டாலினை முதல்வராக்க மாட்டோம் என்றுஅறிவிப்பு வெளியிட வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்ததாகவும், அதை கருணாநிதி ஏற்கமறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து திமுக கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வைகோ அப்போதே வந்துவிட்டார்.
அதே நேரத்தில் தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வுவதை விட 35 இடங்கள் வரை தர தயாராக இருக்கும்அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது, திமுக கூட்டணியில் பாமகவுக்கு உள்ளதைப் போல அதிமுக கூட்டணியில்மதிமுகவுக்கு என்று ஒரு தனி இடத்தை உருவாக்குவது, அதன் மூலம் பாமகவுக்கு இணையான ஒரு முக்கியகட்சியாக மதிமுகவை தமிழக அரசியல் அரங்கில் நிலை நிறுத்துவது என்ற முடிவுக்கு வைகோ வந்துள்ளார்.
இதனால் கடந்த வாரத்தில் பிரதமரைச் சந்தித்தபோது, திமுக கூட்டணியை விட்டு விலகப் போவதை கோடிட்டுக்காட்டிவிட்டு வந்துவிட்டார் வைகோ.
இந்தத் தகவல் திமுகவுக்கும் காங்கிரஸ் மூலமாக வந்து சேர்ந்துவிட்டது என்கிறார்கள்.
வரும் 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை அவரது பிறந்த தினத்தில் வைகோ சந்தித்துப் பேசி கூட்டணிக்கு ரோடுபோடுவார் என்கிறார்கள் மதிமுக வட்டாரத்தில்.
ஆனால், வைகோ அதிமுகவிடம் போவதைத் தடுக்க பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் தீவிரமாக முயன்றுகொண்டுள்ளனர். ஆனால் வைகோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.