ஹோட்டலில் கட்சி ஆரம்பித்த திண்டிவனம்!
சென்னை:
தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை முறைப்படி தொடங்கியே விட்டார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி.
அதிமுக உதவியுடன் காங்கிரசில் குட்டி கலாட்டா செய்து வந்த திண்டிவனம் ராமமூர்த்தி சமீபத்தில் நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய கட்சி தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து இப்போது தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சியை ஒரு ஹோட்டலில் வைத்து தொடங்கினார்.
சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் திண்டிவனம்.
மூவர்ணக் கொடியின் நடுவே காமராஜர் உருவம் பொறிக்கப்பட்டதாக திண்டிவனம் ராமமர்த்தியின் கட்சிக் கொடி அமைந்துள்ளது.
கட்சியைத் தொடங்கி வைத்த பின்னர் திண்டிவனம் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை புதிய கட்சி என்று கூறுவதை விட, காமராஜர் காலத்தில் இருந்த ஆரோக்கியமான அரசியலை வழி நடத்திச் செல்கின்ற இயக்கமாக இது மலர்ந்துள்ளது.
காங்கிரஸ் தொண்டர்களை மனச் சுமையிலிருந்தும், கோஷ்டிச் சண்டையிலிருந்து மீட்கவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
என்னுடன் இருந்த மூத்த தலைவர்கள், தொண்டர்கள் இணைந்து இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளோம்.
முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்தித்து ஆரோக்கியமான விஷயம்தானே, இதைப் போய் குறை சொல்கிறார்கள். எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சி அல்ல. அதிமுகவுடன் கூட்டணி அப்ைபோம்.
அதேபோல அகில இந்திய அளவில் புரட்சிகரமான கருத்தைகொண்ட கூட்டமைப்பும் உருவாகி காங்கிரஸ் அரசை சிதறடிக்கும் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.
அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று தான் கூறினாரே தவிர, கூட்டணி அரசில் பங்கு கேட்போம் என்று திண்டிவனம் வாய் தவறிக் கூட சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஆட்சியில் பங்கு தர மறுப்பதாகச் சொல்லித் தான் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலக வேண்டும் என்று போர்க் கொடி தூக்கினார் திண்டிவனம்.
திண்டிவனம் ராமமூர்த்தியின் கூட்டங்களுக்குப் போனாலே நடவடிக்கை எடுப்பேன் என்று புதிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்திருப்பதால், ஹோட்டலில் வைத்து கட்சி ஆரம்பித்தபோது திண்டிவனத்துக்கு வாழ்த்து சொல்ல முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை, டீ செலவும் வைக்கவில்லை.
வழக்கமாக கட்சி ஆரம்பித்தால் தொண்டர்களை லட்சக்கணக்கில் திரட்டி மாநாடு போட்டு ஆரம்பிப்பார்கள். திண்டிவனமோ ஒரு ஹோட்டல் கான்பரன்ஸ் ஹாலிலேயே அதை முடித்துவிட்டார்.
ஏன் என்று கேட்டால், தொண்டர்களுக்கு அவர் எங்கே போவார் என்று எதிர் கேள்வி எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications