நாளை கருணாநிதி-வைகோ சந்திப்பு
சென்னை:
திமுக கூட்டணியில் தொடரப் போவதாக அறிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாளைகருணாநிதியை சந்தித்து தனது கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளின் பட்டியலை வழங்கவுள்ளார்.
கெளரவமான தொகுதிகள் வேண்டும் என்று கோரிய வைகோ, ஒரு கட்டத்தில் திமுக கூட்டணியை விட்டு ரொம்பதூரம் விலகிப் போனார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிமுக கூட்டணிக்கு வக்காலத்து வாங்கினர்.அவர்களை அதிமுக பல வகையிலும் வளைத்துவிட்டதையறிந்த வைகோ, தொண்டர்கள் மத்தியில் நிலவும்கருத்தை அறிந்தபோது, அவர்கள் திமுக கூட்டணியில் தொடர விரும்புவது தெரிந்தது.
மேலும் வைகோவின் வாரிசையே அதிமுகவின் இரு முக்கிய விஐபிக்கள் போயஸ் கார்டனுக்கே வலிய கொண்டுசென்று பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது தந்தை தான்என்று கூறிவிட்டு அவர் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
தந்தையின் அரசியலில் நான் தலையிடுவதில்லை என்றும் கட்-அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டு வந்தாராம்.
தொண்டர்கள் மத்தியில் நிலவிய கருத்து, பொடாவில் உள்ளே தள்ளிய அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தனதுஇமேஜுக்கு ஏற்படும் ஆபத்து ஆகியவற்றை மனதில் கொண்டு திமுக கூட்டணியிலேயே தொடர வைகோ முடிவுசெய்தார்.
இதை நேற்று அறிக்கை மூலம் தெளிவாக்கிய வைகோ நாளை (புதன்கிழமை) கருணாநிதியை சந்திக்கிறார்.அப்போது தனது கட்சி விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அளிக்கிறார்.
கூட்டணியில் மதிமுகவுக்கு முக்கிய இடம் தரப்படும், வைகோவுக்கு உரிய மரியாதை தரப்படும், ஸ்டாலின் முன்நிறுத்தப்பட மாட்டார், அவருக்காக துணை முதல்வர் பதவியெல்லாம் உருவாக்கப்படாது போன்றஉத்தரவாதங்களும் வைகோவுக்குத் தரப்பட்டுள்ளன.
வைகோவை மீண்டும் திமுக கூட்டணி பக்கமாகத் திசை திருப்பியதில் தொண்டர்கள் தவிர முக்கியபங்காற்றியவர்களில் கவியரசு வைரமுத்துவும் திமுக மூத்த தலைவர் கோ.சி.மணியும் முக்கியமானவர்கள் ஆவர்.
கோ.சி.மணிக்கு வைகோ மீது அலாதி பிரியம் உண்டு, அவர் மீது வைகோவுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதேபோல திமுக தலைவர் கருணாநிதியின் உள் வட்டத்தில் இருக்கும் வைரமுத்து, வைகோவுக்கும் நெருக்கமானவர்என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் அவரிடம் பேசிப் பேசி கரைத்துள்ளனர். ஆனால், முன்னதாக வளைந்து கொடுக்காமல் வைகோமுரண்டு பிடித்து, முடிவெடுக்க தொடர்ந்து கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருந்தபோது, கூட்டணியை விட்டுவைகோவை நீக்கிவிட்டு விஜய்காந்தை இழுப்பது என்ற முடிவுக்கு திமுக வந்தது.
அதை ஆற்காடு வீரசாமியின் அறிக்கைகள் சுட்டிக் காட்ட, வேகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டிய நிலைக்குவைகோ தள்ளப்பட்டார் என்கிறார்கள் திமுகவில்.
கூடுகிறது மதிக ஆட்சி மன்றக் குழு:
இதற்கிடையே மதிமுகவின் ஆட்சி மன்றக் குழு, ஆலோசனைக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் கூட்டம் வருகிற 26ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், உயர் நலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் விவகார ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மையக் குழு ஆகியவற்றின் கூட்டம் 26ம் தேதி தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் நடைபெறும்.
காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமை தாங்குவார். குழு உறுப்பினர்கள் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில், திமுகவில் நீடிப்பது தொடர்பாக தான் எடுத்த முடிவு குறித்து வைகோ விரிவான விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.