போலிகள்- தேர்தல் கமிஷன் தீவிர ஆய்வு
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறியுள்ள நிலையில், அதை விசாரிக்க வந்துள்ள தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த 6 பேர் குழு மாநிலம் முழுவதும் விசாரணையில் இறங்கியுள்ளது.
ஆளுக்கு ஐந்து மாவட்டங்கள் எனப் பிரித்துக் கொண்டு இவர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.சட்டசபைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகவுள்ளது. இந் நிலையில் கடந்த 12ம் தேதி வரை பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அப்போது சுமார் 19 லட்சம் பேர் தங்களது பெயர்களை சேர்க்கக் கோரி விண்ணப்பம் கொடுத்தனர்.
கடந்த முறையும் இப்படித்தான் 19 லட்சம் பேர் மனு கொடுத்தனர். அதில் பெரும்பாலானவை அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கத்தை கத்தையாகத் தந்தவை. போட்டிக்கு திமுகவினரும் தந்தனர்.
அவற்றை பரிசீலனை செய்தபோது 19 லட்சத்தில் 13 லட்சம் மனுக்கள் போலி வேட்பாளர்கள் என்று தெரியவந்தது.
இறந்து போனவர்கள், சிறுவர்கள், சிறுமிகள், அப்படி ஒரு ஆளே இல்லாதவர்கள் என பல கேட்டகரியில் இந்த போலி விண்ணப்பங்கள் இருந்தன. இதையடுத்து அவையெல்லாமே நீக்கப்பட்டன.
இந் நிலையில் இப்போதும் 19 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் போலி வாக்காளர்கள் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து முதலில் 5 அதிகாரிகளை அனுப்பிய தேர்தல் ஆணையம், இப்போது கூடுதலாக ஒரு அதிகாரியையும் தமிழகத்துக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.
கே.ஆர்.பிரசாத், மஜூம்தார், படோலியா, வீரேந்தர்குமார், தபஸ் குமார், கே.என்.பார் ஆகிய அந்த அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.
விண்ணப்பங்களைத் தந்துள்ளவர்களில் சிலரை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வு செய்து அவர்கள் தந்த முகவரிகளுக்கு வீடு, வீடாச் செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கே.ஆர்.பிரசாத் ஆய்வு நடத்துகிறார்.
கடலூர், விழுப்புரம், நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிம் மஜூம்தாரும்; தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வீரேந்தர்குமாரும்;
பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை மாவட்டங்களில் படோலியும், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கே.என்.பார் மற்றும்
நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் தபஸ்குமாரும் ஆய்வு நடத்துகின்றனர்.
24ம் தேதி வரை இந்த ஆய்வு நடக்கிறது. இதன் பின்னர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் அறிக்கை அளிப்பர்.
இதற்கிடையே தேர்தல் கமிஷனின் ஆய்வுகள் வெறும் சடுகுடு ஆட்டமாகவே இருப்பதாகவும், தவறு செய்தஅமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதே இல்லை என்றும் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
அது தான் அதன் தலையெழுத்து என்று நொந்து போய் கூறினார்.
இந் நிலையில் தலைமைத் ஆணையர் கோபாலசாமி இன்றிரவு தமிழகம் வருகிறார். நாளை காலை திருச்சியில் நடக்கும் 7 மாவட்ட கலெக்டர்களுடனான கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் மதுரை சென்று 9 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications